அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (05) ஆஜராகியுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எஸ். சமுதித்த முன்னிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் ஆஜரான பின்னர் அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நான் கடந்த 2015 ஆம் ஆண்டில் சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியிருந்தேன்.
பொதுமக்களின் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில் நான் இந்த முறைப்பாட்டை வழங்கியிருந்தேன்.
எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எஸ் சமுதித்த, எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.