
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பை பொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் தற்போதைய நிலைமை பற்றிக் கலந்துரையாடிய பின்னர் , நேற்றுக் காலை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ,வைத்தியசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைக் குழுவின் பரிந்துரையின்படி இப்பிரிவின் ( ATICU விபத்து அதிதீவிர கண்காணிப்புப் பிரிவு) சுமூக நிலை கருதி ,பொறுப்புத் தாதிய உத்தியோகத்தராக நியமிக்க பட்டிருந்த தாதியை வேறு பிரிவிக்கு இதுவரை காலமும் மாற்றாமல், விபத்து அதிதீவிர கண்காணிப்புப்பிரிவில் (ATICU) சிகிச்சை பெறுவதற்கான நோயாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுவதனை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு விபத்து அதிதீவிரக் கண்காணிப்புப் பிரிவு (ATICU) நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நல்ல நிர்வாகத்துடன் கூடிய அதி தீவிர சிகிச்சைப் பிரிவினை நிறுவுவதற்காக எமது தொழிற்சங்க நடவடிக்கையை விபத்து அதிதீவிர கண்காணிப்பு பிரிவிற்கு மட்டும் மட்டுப்படுத்திக் குறைக்கிறோம்.
இதன் காரணமாக ATICU இலிருந்து , சத்திர சிகிச்சை அதிதீவிர கண் காணிப்பு பிரிவு (SICU) க்கு நோயாளிகளை மாற்றும் போது SICUவில் கட்டில்கள் கிடைப்பதற்கு வசதியாக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட விபத்து அறுவை சிகிச்சைகள் தவிர ஏனைய வழக்கமான சத்திர சிகிச்சைகள் இடம்பெறாது.

ATICU வில் உள்ள நோயாளிகள் மருத்துவ விடுதிகள் அல்லது SICUக்கு மாற்றப்பட்டதும் ATICU இல் கடமையில் உள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையாக அங்கிருந்து பணிப்பாளர் பணிமனைக்கு இடமாற்றப்படுவார்கள்.
எனவே அவர்களை வைத்தியசாலையில் உள்ள ஏனைய அதிதீவிர சிகிச்சை கண்காணிப்புப் பிரிவுகளுக்கு மாற்றுமாறு பணிப்பாளரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள் இன்று மாலை 4 மணி முதல் வழக்கம் போல் செயற்படும்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி , கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி முழு அளவில் எமது தொழில் சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.