மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ள சந்தேக நபர்கள் நான்கு பேரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

இவ்விதம் கைது செய்யப்படவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிசார் ஆஜர்படுத்தியவேளை இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று (03) மாலை நடந்த இந்த சம்பவத்தில் வாழைச்சேனை பிரதேசத் தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டுவந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமை.

இந்நிலையில், சம்பவதினமான நேற்று முன்தினம் இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனத்தை குறித்த பகுதியின் அருகாமையில் நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
.
இந்த நிலையில் அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகரும் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் தனது சகோதரனுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார். அதன் பின்னர் அங்குவந்து சகோதரனுடனும் சிலர் வாய்த் தர்கத்தில் ஈடுபட்ட நிலையில் பகுதியில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் மீது 4 பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களும், பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் ஆயித்தியமலையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை பேத்தாழை பகுதியில் திருமணம் செய்து கெண்டவருமான ஒரு பிள்ளையின் தந்தையான டிலோஜன் (வயது -33) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலில் 7 இடத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி பாதியாக உடைந்த நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர்மேற்கொண்டு வருகின்றனர்.