மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் கொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலெக்சாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் நேற்று (11) மாலை களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது,
அலைக்ஸாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் மாத்தளையைச் சேர்ந்தவர் எனவும், தான் பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாளராக செயற்பட்டு, தேசிய மக்கள் சக்திக்காக அதனையும் துறந்துவிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதி மக்களுக்காக வந்து சேவை செய்து வருவதாகம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இப்பகுதியில் அக்கட்சிக்காக செயற்பட்டு வந்தவராவார்.

இந்த நிலையில் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றிற்குள் குறித்த அலைக்ஸ் என்பவர் நேற்றைய தினம் (11) புகுந்து, ஏன் பிள்ளைகள் இன்றையதினம் குறைவாக வந்துள்ளார்கள், என்ன காரணம் என கேட்டு, அங்கிருந்த பாலர் பாடசாலை ஆசிரியையுன் தர்க்கம் புரிந்து, தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.
மேலும் நீங்கள் எடுத்த வீடியோவை வெளியிட்டால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவேன் எனவும் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியை அவரது செயற்பாடுகளை தனது கைபேசியில் வீடியோ எடுத்துள்ளார் இதன்போது ஆசிரியையை அலெக்ஸ் தாக்க முற்பட்டுள்ளார்.
அதன்போது அலைக்ஸின் கைவிரல் நகம் ஆசிரியையின் கையில் கிளித்துள்ளதாக குறித்த ஆசிரியை தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் ஆசிரியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இது அவ்வாறு இருக்க குறித்த ஆசிரியை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் பட்டிருப்பு தொகுதிக்குரிய தேசிய மக்கள் சக்தியின் கட்சி அமைப்பாளராக தவஞானசூரியம் என்பவர் காணப்படுவதுடன், அலெக்ஸ் என்பவர் தமது கட்சியின் அத்தொகுதிக்குரிய அமைப்பாளர் இல்லை. மாறாக எமது கட்சிக்காக தேர்தல் காலத்தில் அங்கு வந்து வேலை செய்தவர்தான். ஆனால் அவரை தேர்தல் முடிந்த கையோடு அவரை அவருடைய மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துவிட்டோம். அதனையும் கடந்து அவர் இப்பகுதியில் நின்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க அலெக்ஸாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் தேசிய மக்கள் சக்தி கட்சியினால் பட்டிருப்பு தொகுதிக்காக உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர் இல்லை அவர் தன்னிச்சையாகவே அத்தொகுதிக்கு வந்து, செயற்பட்டு வந்தாக அக்கட்சியைச் சேர்ந்த மற்றுமொருவரும் தெரிவித்திருந்தார்.