பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவிக்கு (ஜ லவ் யூ) காதலிப்பதாக தெரிவித்த அதே வகுப்பில் கல்விகற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் ஆண் பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று (14) குறித்த பாடசாலையில் தரம் 10 ம் வகுப்பில் கல்விகற்றுவரும் மாணவி ஒருவரைப் பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஜ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஜ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்ததையடுத்து, அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு கூறி எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து, மாணவனை பெற்றோர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அதிபருக்கு எதிரா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர். அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.