அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது.
எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ,சம்மாந்துறை,நிந்தவூர்,அம்பாறை ,இறக்காமம் ,மத்திய முகாம் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை விவசாயிகளினால் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.
நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,விளைச்சல் கடந்த போகங்களை விட திடீர் மழை வீழ்ச்சி காரணமாக குறைவடைந்த போதிலும் நெல்லுக்கான கேள்வி அதி உச்சத்தில் காணப்படுகின்றது.
இது தவிர தாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன் பட்டு வேளாண்மை செய்கை மேற்கொண்ட போதிலும் தமது வேளாண்மை மழையினால் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்களை விட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும்,அரிசி ஆலை உரிமையாளர்களுமே அதிகளவில் நெல்லினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்து வருகின்றனர்.
இப்பெரும் போக வேளாண்மைச் செய்கை காலநிலை மாற்றம் விலைவாசி காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக அறுவடை இயந்திரங்கள் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேளாண்மை அறுவடை இடம்பெறும் நேரத்தில் கடும் மழை ஏற்பட்டதால் தமது வேளாண்மை நீரில் மூழ்கிக் காணப்படுவதால் அறுவடை செய்ய முடியாது உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தவிர அண்மையில் பெய்த மழை மற்றும் காட்டு யானைகளின் வரவினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

