மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் அவர்களை முழுமையாக மதுப்பழக்கத்திலிருந்து விடுவித்து, மீண்டும் சமூகத்தில் இயல்பாக வாழ வைக்கும் முயற்சியாக இந்த மையம் அமைந்துள்ளது.
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு முழுமையான விடுதலை, சமூக மறுவாழ்வு, உளவியல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவி உட்பட குடும்பத்தினருக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி கைகொடுக்கும் மையமாக இது செயல்படவுள்ளது.
போரும் அதன் பின்னரான அரசியல் மற்றும் சமூகச் சூழலும் கிழக்கு மாகாணத்தில் மதுப் பாவனையை அதிகரித்ததன் விளைவாக சமூகப் பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கும் இச்சவாலான சூழ்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு மையம் அமைவது ஒரு முக்கியமான காலகட்டத்தின் தேவையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த மையம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய உளநலப் பணிப்பாளர் எல்.என். மகோதரட்ன, சமூக நல ஆலோசகர் யமுனா எல்லாவேலா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் , கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் ஜி. சுகுணன், மட்டக்களப்பு உளநல வைத்திய நிபுணர்களான ரீ. கடம்பநாதன், ஆர். கமல்ராஜ், செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி உட்பட பிராந்திய வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.