மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு மிக தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் களவாடப்பட்டமை குறித்து பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தின் கும்பாபிஷேக பணிகளுக்காக ஆலய எழுந்தருளி விக்கிரகம் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த விக்கிரகங்கள், பூசை பொருட்கள் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டடிருந்த நிலையில், மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 01.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், அங்கிருந்த சிசிரிவி கமராவிலும் குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை என ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.

