தொடருந்து ஓட்டுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டித் பரீட்சைக்கான விண்ணப்பங்களை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தொடருந்து திணைக்களம் கோரியுள்ளது.
இந்த மாதம் 28ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி, ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
எதிர்காலத்தில் பெண்களை தொடருந்து ஓட்டுநர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பெண்களை தொடருந்து ஓட்டுநர்களாக நியமிப்பது சாத்தியமில்லை என்று தொடருந்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமார் 8 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு சுமார் 100 ஓட்டுநர்களை பணியமர்த்துவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடருந்து திணைக்களம் பல ஆண்டுகளாக தொடருந்து ஓட்டுநர்களை நியமிக்காததால் சுமார் 150 ஓட்டுநர்களை பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.