இலங்கையில் போலி இறக்குமதி பரிவர்த்தனைகளை பயன்படுத்தி, சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 214.7 பில்லியன் ரூபாய்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறை (CID) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, பாராளுமன்றத்தின் நிதி தொடர்பான குழு (COPF) முன்னிலையில் விளக்கமளிக்கும் போது வெளியிட்டார்.
அவரது தகவலின்படி, 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில், 105 நிறுவனங்கள் மூலம் போலியான இறக்குமதி ஆவணங்களை பயன்படுத்தி பெருமளவு நிதி வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட பொருட்கள் உண்மையில் நாட்டுக்குள் வராத போதிலும், அவற்றிற்கான கட்டணங்கள் சுமார் 24,300 தந்திப் பரிமாற்றங்கள் (Telegraphic Transfers – TTs) மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பான விசாரணை, இலங்கை சுங்கத் திணைக்களம் அளித்த முறைப்பாடுகளை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதுவரை 55 நபர்கள், 227 வங்கிக் கணக்குகள் மற்றும் 105 நிறுவனங்கள் இந்த சட்டவிரோத நிதி பரிமாற்றங்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளில் நிதி அனுப்புவதற்காக போலி இன்வொய்ஸ்கள் (Invoices), போலியாக தயாரிக்கப்பட்ட சுங்க ஆவணங்கள் மற்றும் தவறான இறக்குமதி பதிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக CID விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நிதி பரிமாற்றங்களில் 13 அரச மற்றும் தனியார் வங்கிகள் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றின் பங்களிப்பு குறித்தும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், 43 நிறுவனங்கள் மூலம் சுமார் 43 மில்லியன் அமெரிக்க டொலரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அசங்க கரவிட்ட தெரிவித்தார்.
அத்துடன், இந்த நிதி மோசடி வலையமைப்பு துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்புடைய பணமோசடி வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதற்கான தகவல்களும் விசாரணைகளில் கிடைத்துள்ளதாக CID தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய முன்னேற்றமாக, இண்டர்போல் (INTERPOL) உதவியுடன் துபாயில் இருந்து இரண்டு முக்கிய சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, குற்றப்புலனாய்வுத் துறையின் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவும், குற்றச் செயல்களால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்த சர்வதேச பணமோசடி வலையமைப்பின் முழு பின்னணியையும் கண்டறியும் நோக்கில் விரிவான விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இந்த விவகாரம் இலங்கையின் நிதி ஒழுங்குமுறை, வங்கி கண்காணிப்பு மற்றும் இறக்குமதி நடைமுறைகளில் காணப்படும் பலவீனங்கள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







