சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேசபந்து தென்னக்கோன் நீதிமன்ற உத்திரவை அவமதித்து சுமார் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசபந்து தென்னக்கோனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை பல்லேகெலே, தும்பர சிறைச்சாலையில் உள்ள சிறைக்கூண்டில் விசேட பாதுகாப்புடன் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.