மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் நேற்று (25) செவ்வாய் கிழமை இரவு பிடிக்கப்பட்டதாக
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்சயன் தெரிவித்தார்.
நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.
இதனையடுத்து மாநகர சபை அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்று இரவு மாநகர சபைக்குட்பட்ட பகுதி வீதிகளில், பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 05 கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டது.
வீதியில் மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக அழைந்து திரிகின்றது. இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகின்றது என தெரிவித்தார்.
எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தி தண்டப்பணத்தினையும் செலுத்த வேண்டும். இல்லையென்றால் 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.