2008ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீண்டகால விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதற்கமைய, குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்றாவது நபருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்ற இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, சட்டத்தின் முன் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.








