மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள்.
போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன்.
அதே போன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும்.
மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் சரத் பொன்சேகா தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.