ஹட்டனில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியரினால் பேருந்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (07) ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிர் மேலும் தெரியவருகையில், பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா போடைஸ் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது, மாணவியின் கால் ஆசிரியை ஒருவரின் சாரியில் பட்டமையினால் ஆத்திரமடைந்த ஆசிரியை பேருந்தில் வைத்து குறித்த மாணவியை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவி ஹட்டன் காவல் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியைக்கு எதிராக முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, மாணவி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக குறித்த ஆசிரியை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதம் அரச பேருந்தில் பயணசீட்டுகள் ஊடாக பயணித்த மாணவர்களை அரச பேருந்தில் இருந்து இறக்கிய சம்பவம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை பாராமன்றத்தில் வைத்து அதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தது.
இதனை போல, பொது மக்கள் பயணிக்கும் பேருந்தில் சமூகத்தின் முன்மாதிரியாக விளங்க வேண்டிய இந்த ஆசிரியை அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்றையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.