இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் உருவாகியுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஆகஸ்ட் 06ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவரது விளக்கத்தின்படி, திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய பகுதிகளை விட சற்று கனமழை பெய்யக்கூடும். அதேவேளை, தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கத்தால் தற்போது மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் மழை நிலை ஆகஸ்ட் 06ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியான மழையால் பல பகுதிகளில் மண் நீரால் நிரம்பியுள்ளதால், குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வலுவடையும் எல்நினோ
மத்திய பசிபிக் பெருங்கடலில் மிக வலுவான எல்நினோ உருவாகி வருவதாகவும், ஆகஸ்ட் 2ஆம் திகதி நினோ 3.4 பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 2.4°C அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்நினோவின் தாக்கம் வடமேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் ஏற்கனவே பதிவாகியுள்ளதுடன், அது இந்து சமுத்திரத்தின் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் முதல் கடும் வெப்பம்
முன்னர் கணிக்கப்பட்டதை விட எல்நினோவின் உச்ச நிலை செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பித்து, 2027 ஜனவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக செப்டெம்பர் இறுதிவரை வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம் மற்றும் குறைந்த மழை காரணமாக கடுமையான நீர்த் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒக்டோபர் – நவம்பரில் அதிக மழை
இதற்கு மாறாக, ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வால் அதிகளவிலான தாழமுக்கங்கள் உருவாகும் சூழல் காணப்படுவதாகவும், இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுக் காலத்தில் குறைந்தது 6 தாழமுக்கங்கள் உருவாகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 2 தாழமுக்கங்கள் புயல்களாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதன் விளைவாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சில பகுதிகளில் 900 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
வெள்ள அபாயமும் அதிகரிக்கும்
தாழமுக்கங்களின் தாக்கத்தால் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதால், வெள்ளப்பெருக்கு மற்றும் திடீர் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை வங்காள விரிகுடா உள்ளிட்ட இந்து சமுத்திரப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட அதிகரிக்கும் போது தாழமுக்கங்கள் மற்றும் புயல்கள் உருவாகும் சாத்தியம் மேலும் உயரும் என்றும் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.








