மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்று, அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலை செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறு 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் சாந்தி இன்று (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் எதிர்வரும் 19 ம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான சிவயோகநாதன், செல்வகுமார், அரவிந்தன் ஆகியோர் நோர்வே நாட்டில் இருந்து தனது தாயாரின் பெயரை பாவித்து பணத்தை பெற்று, விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவ படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
எனவே அமைதியாக செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை இவர்கள் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர். எனவே இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி, இவர்களை தடைசெய்து, நான் அமைதியாக நினைவேந்தலை செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.