வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தினால் 2026 முதல் 2031ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அதில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கடன் உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள், 2026 பெப்ரவரி 9ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் அடிப்படையில் இலங்கை அரசுக்கும் உலக வங்கிக் குழுமத்திற்கும் இடையில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன், பொருளாதார ஆற்றல் கொண்ட துறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல், பொருளாதார வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலான தொடர்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், நிலையான பிராந்திய அபிவிருத்தியை ஏற்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்நிலையில், குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நிதி ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதியும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.








