தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும், இளைஞர் சமுதாயத்திற்கு அன்னை பூபதியின் தியாகத்தை பகிரும் நோக்குடன் மட்டக்களப்பு தாயக செயலணியின் ஏற்பாட்டில் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட உதைபந்தாட்டக் கழகங்களை உள்ளடக்கியதான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்றையதினம் (15) வாகரை கண்டலடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தாயக செயலணி அமைப்பில் ஒருங்கிணைப்பாளர், சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இவ் உதைப்பந்தாட்டப் போட்டி ஆரம்ப நிகழ்வில் குறித்த அமைப்பின் வாகரை பிரதேச பிரதிநிதிகள், உதைபந்தாட்டக் கழகத்தின் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

போட்டி ஆரம்பத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்றி, மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், வீரர்கள் அறிமுகம் என்பன இடம்பெற்று தாயக செயலணி அமைப்பின் நிருவாகிகளால் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த உதைபந்தாட்டப் போட்டியில் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட 17 அணிகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.










