இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் – வட்டக்கண்டல் வேட்பாளர் உட்பட சிலர் மாந்தை கிழக்கு ஆண்டான்குளம் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் தெரிவிக்கையில்,
“மன்னாரில் தேசிய மக்கள் சக்தியின் மாந்தை மேற்கு ஆண்டான்குளம் வேட்பாளர் மீது மது போதையில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் உட்பட இணைந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான எமது கட்சி வேட்பாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “ஜனாதிபதி கட்சியில் கேட்பவர் இவன் தான்” எனக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கபபட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சிராஸ்வா, டெனீஸ்வரன் ஆகியோர் தாக்குதல் நடத்தியவர்கள் சார்பாக முன்னிலையாகியுள்ளனர் “எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
