பயிற்சி ஓட்டுநர் (‘L’) பலகைகளைக் கொண்ட வாகனங்களும், பயிற்சி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் இயக்கும் வாகனங்களும் அதிவேக நெடுஞ்சாலைகளில் நுழைய அனுமதி இல்லை என இலங்கை பொலிஸார் மீண்டும் நினைவூட்டியுள்ளனர்.
பயிற்சி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுவதாகவும், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவதற்கு அது செல்லுபடியாகாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவதற்கு முழுமையான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் எனவும், முழு உரிமம் பெற்ற ஓட்டுநர் அருகில் இருந்தாலும் ‘L’ பலகையுடன் உள்ள வாகனங்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களில் இவ்வாறான வாகனங்கள் தடுக்கப்படுவதுடன், விதிமுறைகளை மீறி நெடுஞ்சாலைக்குள் நுழையும் சாரதிகளுக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோதமாக வாகனம் இயக்கப்படும் நிலையில் விபத்து ஏற்பட்டால், அதற்கான காப்புறுதி இழப்பீட்டு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.








