கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீனின் நெறிப்படுத்தலிலும், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா சாரப்தீனின் வழிகாட்டலிலும் இந்த திடீர் சுகாதார பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பொதுச் சந்தையில் விரிவான சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பழுதடைந்த மரக்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட சில வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரிசோதனையின் பின்னர், சந்தை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் மற்றும் பொதுச் சுகாதார விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.








