கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவரது உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிலையத்தில் வீசிய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி விடுதியில் தர்மராஜா கார்த்திகா என்ற பெண்ணைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேட்ரிக் கிருஷ்ணராஜா மீது சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீண்ட விசாரணைக்கு பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்துள்ளார். தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று கூறினார்.

எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசுத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் அந்தக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதால், அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.