கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (24) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நேற்று மாலை 5. 15 மணியளவில் குறிஞ்சாக்கேணி ஆற்றில் 3 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்ததாகவும், அந்த நேரம் அவர்கள் மூவரும், நீரோட்டத்தில் சிக்குண்டபோது, ஒருவர் காணாமல் போனதாகவும், ஏனைய இரு சிறுவர்களும் தப்பித்துக் கரையை அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுவனை, பிரதேசவாசிகள் சுமார் 45 நிமிடங்கள் தேடி, மீட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பிரதேச, திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.எம். சாபி, வைத்தியசாலைக்கு வருகை தந்து, மற்றைய இரு சிறுவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, பொலிஸாரிடம் அறிக்கையை கையளித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.