வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்ததாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தன்னை தொலைபேசியில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீன வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது.

மேலும் வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஆலோசனையோ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல் என்றும், வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும்.
அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும் சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.