மட்டு கரடியனாற்றில் 6 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர்
இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது
மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிபத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று (29) மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் கோரிய போது அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.