வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா – ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பண்டாரகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை பண்டாரகமை கிதெல்பிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 6,230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேக நபரை ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளில், சந்தேக நபரான இராணுவ சிப்பாய் சபுகஸ்கந்த, மீகஹவத்தை, களனி மற்றும் பண்டாரகமை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளன.
சந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களில் கொள்ளையிட்டதாக கூறப்படும் தங்க நகைகளும் இரத்மலானை மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களில் உள்ள நகை அடகு கடைகளில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.