அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிரகாரம் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே இனி வரும் காலங்களில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியும்.

அத்துடன் அமைச்சரவைத் தீர்மானங்கள் மற்றும் அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பான கேள்விகள், அரசாங்கம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட முக்கிய கேள்விகளுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் தான் பதிலளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பை மேற்கொள்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.