ஸ்கைப் சேவையை நிறுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஸ்கைப் சேவை நாளை முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக வழங்கி வந்த ஸ்கைப் தளத்தை, ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியாவைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் 2003 ஆம் ஆண்டு உருவாக்கினர்.
தொடர்ந்து வேறு நிறுவனங்களுக்கு கைமாறிய ஸ்கைப் தளம், கடந்த 2011ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் வசம் வந்து சேர்ந்தது.

விண்டோஸ் லைவ் மெசென்ஜர் சேவைக்கு மாற்றாக சுமார் 8.5 பில்லியன் டொலருக்கு ஸ்கைப் தளத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது.
இந்த சேவைக்கும் உலகம் முழுவதும் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 2023 கணக்கின்படி சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்கைப் சேவையை மே ஐந்தாம் திகதியுடன் நிறுத்துவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
“Microsoft Teams” சேவையில் கவனம் செலுத்தவும், மக்கள் தங்கள் சேவையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சேவையை மாற்றியமைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.