தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும். அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.







காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில், காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பபட்டு 10.30 க்கு அகவணக்கமும், அதனை தொடர்ந்து பொதுச்சுடரை இறுதி யுத்தத்தில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா அவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
