அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை பெய்த கனமழையுடன் கூடிய காலநிலையின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில், குறித்த வீட்டில் எவரும் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தின் தந்தை தொழில் நிமித்தம் கொழும்புக்கு சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், மழை பெய்ய ஆரம்பித்த போது வீட்டில் இருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு சென்றிருந்ததால், அவர்கள் பாதுகாப்பாக தப்பியுள்ளனர்.
இந்நிலையில், மின்னல் தாக்கத்தினால் வீட்டின் உள்ளே தீ பரவி, வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து அழிந்துள்ளன.
தீயை அவதானித்த பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








