முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்னாள் கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதிக்கு தவணையிட்டு நேற்று (19) உத்தரவிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய பிரபல சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துனர்.
இந்நிலையில், குறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்லவிருந்து நிலையில் ஜனவரி 3ஆம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி அன்று ஆஜராகிய நிலையில் நீதவான் அடுத்த வழக்கு எதிர்வரும் ஜுன்16ஆம் திகதி நீதின்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.