ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போர்வீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்றச் சென்றிருந்த ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென குறித்த நபர் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபருடன் இருந்த இரண்டு பிள்ளைகளையும் பாதுகாப்பு கருதி பொலிஸார் பொறுப்பில் வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலங்கம பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காணிப் பிரச்சினை தொடர்பில் 65 முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் வெலிபன்ன பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறித்த நபர் கூறியுள்ளார்.
பொலிஸாரினால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஜனாதிபதிக்கு நேரடியாக முறைப்பாடு செய்ய தாம் முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சந்திக்க இடமளிக்காவிட்டால் வீதியில் செல்லும் வாகனங்களில் பிள்ளைகளுடன் மோதுண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதிக்க முடியாது என பொலிஸார் குறிப்பிட்டதனைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாருடன் முரண்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் மனநிலை குறித்து ஆராய்ந்து மருத்துவ சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.