மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
கூடுதல் பணி மற்றும் விடுப்பு கொடுப்பனவுகளைக் குறைப்பது தொடர்பாக,திருத்தப்பட்ட சுற்றறிக்கையை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்.
இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் நிர்வாகக் குழு இந்த முடிவை எட்டியுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக,கொடுப்பனவுகளை அவற்றின் முன்னைய மதிப்புகளுக்கு மீண்டும் வழங்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், பொது நிர்வாக அமைச்சகம் 2025 மார்ச் 25 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சுகாதார அமைச்சகம், 2025 ஏப்ரல் 28 அன்று ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.
இருப்பினும், அந்த சுற்றறிக்கையில் கூடுதல் பணி கொடுப்பனவுகளுக்கான தவறான கணக்கீடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல அடிப்படை மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகளை மீறுவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.