அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிகார வரம்பினை மீறி சர்வதேச வரிகளை விதித்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வரிகள் சாதாரண மக்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைவரிடமும் இறக்குமதி செலவுகளை அதிகரிக்கச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த தீர்ப்பை ஏகமனதாக வழங்கியது.
விடுதலை நாள் “லிபரேஷன் டே” என அழைக்கப்பட்ட வரிகள் மற்றும் சீனா, மெக்சிகோ, கனடாவுக்கெதிராக போதைப் பொருள்கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்ட வரிகளையும் இந்த தீர்ப்பு தடை செய்கிறது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், பெரும்பாலான வரிகள் 10 நாட்களுக்குள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனினும் இந்த தடைக்கு எதிராக டிரம்ப் அரசாங்கம் மேன்முறையீடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- சீனாவிற்கு விதிக்கப்பட்ட 30% வரி
- மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு விதிக்கப்பட்ட 25% வரி
- பெரும்பாலான உள்நாட்டு வர்த்தக பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 10% பொதுவரி இதில் இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனப் பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட 25% வரிகள் மட்டும் இந்த தீர்ப்பின் உட்பட்டதல்ல, ஏனெனில் அவை வேறொரு சட்டமான 232ம் பிரிவின் கீழ் அமுல்படுத்தப்பட்டவை.
இந்த வழக்கை லிபர்ட்டி ஜஸ்டிஸ் சென்டர் ‘Liberty Justice Center’ எனும் உரிமைகளை ஆதரிக்கும் அமைப்பும், VOS Selections என்ற வைன் விற்பனையாளரும், நான்கு சிறிய நிறுவனங்களும் தாக்கல் செய்தனர்.
இதனுடன் ஒன்பது மாநிலங்கள் கொண்ட ஜனநாயகக் கட்சி ஆட்சி மாநிலங்களும் வழக்கு தொடர்ந்திருந்தன.
“இந்த தீர்ப்பு மிக முக்கியமானது. வர்த்தகத் துறையிலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்,” என Liberty Justice Center சட்டத்தரணி ஜெஃப்ரி ஸ்வாப் குிறப்பிட்டுள்ளார்.

நீதிமன்றின் இந்த தீர்ப்பிற்கு அரசாங்கத் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச அவசர பொருளாதார சட்டத்தின் கீழ் “IEEPA (International Emergency Economic Powers Act) ஜனாதிபதிக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை,” என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு டிரம்ப் நிர்வாகத்தின் ஆட்சி சக்தியை மையமாக கொண்டு நடைபெறும் முக்கிய வழக்காக மாறியுள்ளது.
முடிவில், இது சர்வதேச வர்த்தக சட்டம் மற்றும் ஜனநாயக ஆட்சியின் அதிகாரப் பிரிவுகள் குறித்த முக்கியமான முன்னுதாரணமாக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்த வழக்குத் தீர்ப்பு சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.