உலகக்கிண்ண கால்பந்து விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில்,
ஆர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் ஏர்ஸில் உள்ள புகழ்பெற்ற ஒபெலிஸ்க் கல் தூபி அருகே பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு இவ்வெற்றியைக் கொண்டாடியுள்ளனர்.
போட்டியின் 85ஆவது நிமிடம் வரை இங்கிலாந்து முன்னிலையில் இருந்த நிலையில், ஆர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தது. அதைத்தொடர்ந்து, அதிக நேரத்தில் லௌதாரோ மார்டினெஸ் அடித்த அதிரடி கோலால் ‘ஆர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றது. 39 வயதான நட்சத்திர வீரர் மெஸ்ஸி, இந்த ஆட்டத்தில் 2 அசிஸ்டுகளைச் செய்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
1982 ஆம் ஆண்டு ஃபாக்லாந்து தீவுகளுக்காக பிரிட்டனுக்கும் ஆர்ஜென்டினாவுக்கும் இடையே நடந்த போரில் 649 ஆர்ஜென்டின இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இப்போட்டி வெறும் கால்பந்து போட்டியாக மட்டுமில்லாமல், அந்தப் போரில் இழந்த உயிர்களுக்கான உணர்வுப்பூர்வமான பதிலடியாக அந்நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே 1986 உலகக்கிண்ணத்தில் மரடோனா இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சர்ச்சைக்குரிய கோல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மெஸ்ஸி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய இந்த ஆட்டமும் இரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,நாட்டின் நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தும், கொடிகளை ஏந்தியும் இரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியைக் கண்ணீருடனும் ஆக்ரோஷத்துடனும் கொண்டாடி வருகின்றனர்.








