நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் பலத்த காற்று வீசுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மழையுடனான காலநிலை காணப்படுகின்ற நிலையில் இன்று (29) அதிகாலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழகைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது.
இதனால் சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனி மூட்டம் நிலவுகின்றது.

விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரித்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.