தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியினால் முன்வைக்கப்பட்ட 5 ஆய்வு முன்மொழிவுகளும் இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராட்டினைப் பெற்றுள்ளது.
தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு மலரில் பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் நாமம் பதிவாகியுள்ளமையும் பெருமைக்குரியதாகும்.

இம்மாநாட்டில் பங்குபற்றிய தமிழ்மொழி மூலமான இரு பாடசாலைகளில் கிழக்கிலிருந்து பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியும் வடக்கிலிருந்து இந்துக் கல்லூரியும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆய்வு விபரங்களும் ஆய்வுக் குழுக்களும்
- வாகனப் புகைக்கு எதிரான உயிரியல் கண்காணிப்பு கருவியாக “மாவிலைகளை” பயன்படுத்துதல். இவ்வாய்வானது பங்குபற்றிய 144 ஆய்வுகளுக்குள் 1வது இடத்தினைப் பெற்றுள்ளது.
ரி.அபிட்ஷன், ஜி.போவிலாஷினி, எஸ்.ஷப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
- இயற்கைக் காளான்களைப் பயன்படுத்தி கழிவு நீரிலிருந்து நீரின் கடினத் தன்மையை நீக்குதல். வி.நரேந்திரப்பிரஷாத், எஸ்.டிலக்ஷி, ஆர்.அக்ஷிதா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
- மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர்முனைப் பகுதியைச் சுற்றி உள்ள திறந்தவெளி கிணற்று நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல். பி. பிரணவன், யூ.பிறீத்திகா, வி.நதுஷா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
- இலங்கையின் நான்கு வகையான வாழை இனங்களில் உள்ள எதிர் ஒட்சியேற்றல் (Antioxidant) காரணிகளின் செயற்பாட்டினை மதிப்பீடு செய்தல். எஸ்.மேருகாசன், கே.ரேவந்தியா, பி.ஷப்தவி ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
- க.பொ.த. உயர்தரத்தில் இரசாயனவியல் பாடத்தில் சித்தி பெறுவதற்கு இரசாயனக் கணிப்பின் முக்கியத்துவம். எம்.தருணியன், எஸ்.ஜெயசாதனா, ஜி.நிகாஷினி ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
இம்மாணவர்கள் அதிபர் திரு. எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனைக்கமைவாக ஆசிரியர்களான திரு.செ.தேவகுமார், திரு.ரி.யுதர்சன் ஆகியோரினால் வழிப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.