களுத்துறை மாவட்டத்தின் வாதுவை பகுதியில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் வாதுவையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு முதலாவது மகப்பேறு நடைபெற இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதையடுத்து காய்ச்சல் தற்காலிகமாகக் குறைந்துள்ளது. பின்னர் மலச்சிக்கல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாததால், அவர் அரச மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி சிசுவும், 29ஆம் திகதி மாலை தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








