மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் காரியாலயத்தில் ஆயுதங்கள் மற்றும் சடலங்கள் என்பன மீட்கப்படவில்லை எனவும், சிலஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிடுவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (30) கொழும்பில் இருந்து சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தங்கள் அலுவலகத்தை சோதனை செய்ய வந்ததாகவும், அந்தநேரம் சோதிப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதி இருக்கிறதா என தாம் கேட்டபோது, குறித்த கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி இருப்பதனால் காரியாலயத்தை சோதனை செய்ய அனுமதி பத்திரம் தேவை இல்லை எனவும் குறித்த சிஐடியினர் சுட்டிகாட்டி சோதனையை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு நேற்று (30) இரவு 8.30 மணி வரைக்கும் காரியாலயத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், காரியாலயத்தில் ஆவணங்களை ஆராய்ந்து அதில் சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாறாக கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை எனவும், ஆயுதங்கள் மீட்கப்படவில்லை எனவும் மற்றும் சடலங்கள் மீட்கப்படவில்லை எனவும் மேலும் சுட்டிக்காட்டிய அவர், சில ஊடகங்கள் அரசியல் நோக்கங்களுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு எவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது செய்திகளை உறுதிப்படுத்திவிட்டு வெளியிடுமாறும், அவ்வாறு தங்கள் கட்சி சார்ந்த செய்திகளை வெளியிடும் முன்னர் அதனை உறுதிப்படுத்த தன்னையோ, அல்லது கட்சியையோ தொடர்பு கொண்டு , உறுதிப்படுத்திய பின்னர் செய்தியை வெளியிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
https://battinaatham.net/?p=131672