அண்மைய காலங்களாக சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா போன்ற நோய்கள் அதிகளவு பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (LRH) விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரிப்பதற்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அமைந்துள்ளது.
நுளம்புகள் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் அறிகுறிகளைக் கொண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஆபத்தானதாக இருப்பதோடு, சிக்குன்குனியா பெரும்பாலும் நோயாளிகளுக்கு பல மாதங்களாக நீடிக்கும் நீண்டகால மூட்டு வலியால் அவதிப்பட வைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு சிக்குன்குனியா கடும் உடல்நல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகள் வயிற்றிலுள்ள சிசுவை பாதிக்கக்கூடும்.
நுளம்புகளால் பரவும் நோய்களுக்கு மேலதிகமாக, சிறுவர்களிடையே இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் வேகமாகப் பரவி வருகிறது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் விழிப்புடன் இருப்பதோடு, சரியான நேரத்தில் வைத்திய உதவியை நாட வேண்டும். நோய் பரவலைத் தடுக்க சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
வானிலை மற்றும் பருவகால மாற்றங்களுடன் தொடர்புடைய தொற்று நோய்களின் சிறுவர்களிடையே அதிகரித்து வருவதால் பொது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மருத்துவ சமூகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.