தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தின் பலவந்த போக்கிற்கு பதிலடியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சகல உள்ளுராட்சிமன்றங்களிலும் ஆட்சியமைப்போம் என்று அரசாங்கம் ஆணவப் பேச்சு பேசியது.
ஆனால் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களுக்கமைய 161 சபைகளில் மாத்திரமே அரசாங்கத்துக்கு ஆட்சியமைக்க முடிந்துள்ளது.

எஞ்சியுள்ள 178 சபைகளில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் மூலமே ஆட்சியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. ஆனால் நாட்டில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவில்லை.
இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே அரசாங்கம் மக்கள் செல்வாக்கினை இழந்து வருகிறது.
இலங்கையில் விலை குறைக்கப்படாமைக்கான காரணம் என்ன? அவ்வாறெனில் இந்த அரசாங்கத்திலும் ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனவா? அல்லது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை வழங்கவில்லை என மக்கள் மீது அரசாங்கம் கோபம் கொண்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.