கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் (CRP) கடந்த 2 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சிறையினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள், அலைபேசிகள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து இரவு 10 மணியளவில் முன்னெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோதனை “எச் வாஸ்” என அறியப்படும் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது பெருமளவிலான ஐஸ், ஹெரோயின், கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள், இரண்டு ஸ்மார்ட் அலைபேசிகள் (Apple வகை உட்பட), சாதாரண கைபேசிகள் சுமார் 20, மொபைல் சார்ஜர்கள் 26, பேட்டரிகள் 15, சிகரெட்டுகள் 15, மற்றும் 15,280 ரூபா மேற்பட்ட பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொதுத் தகவல் பிரிவின் அதிகாரிகள் ஸ்கேன் கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையில், கைதிகள் தங்கும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் நுட்பமாக பதுக்கப்பட்டிருந்த இந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
இக்கைதிகள், சிறைக்குள்ளே போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.