திருகோணமலை – திருக்கடலூர் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று (05) நிலாவெளி பகுதியில் பிரதான வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தே ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவத்தில் திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது மீனவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாகும். எனவே, தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தின் பிரதான கோரிக்கையாகும்.
போராட்டத்தின் போது “மீனவனின் நிலமையை பார்”, “மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை மீனவர்கள் ஏந்தி நின்றனர்.
குறித்த பகுதியில் சில மணிநேரத்திற்கு போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
