வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூன் மாதம் 04ம் திகதி மூடப்படும் என, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம நேற்று (08) அன்று தெரிவித்தார்.
கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26 ம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவ அத்துடன் நிறைவடையும் என கூறினார்.
கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.
வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

தனித்தனியாக அல்லது ஐந்து பேர் சேர்ந்து காட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். குறைந்தது 15 அல்லது 20 பேர் அல்லது அதற்கும் அதிகமான தொகையினர் சேரும் போது தான் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் யாத்திரீகர்கள் அனைவரும் தத்தமது அடையாள அட்டைகளை கொண்டு வருவது கட்டாயம் எனவும் தெரிவித்தார். இம்முறை ஆலயம் மற்றும் ஆலய சுற்றுச்சூழல் பிரதேசங்களில் சுகாதாரம் தொடர்பான கண்காணிப்புக்கு அம்பாறை, கல்முனை மற்றும் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் பணிமனைகள் பொறுப்பாக இருக்கும்.
விசேட பாதுகாப்பு மற்றும் அடியார்களுக்கு 24 மணி நேர வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.உகந்தமலை முருகனாலயத்திலிருந்து குமுக்கனூடாக யால வனப்பகுதியூடாக பாத யாத்திரிகர்கள் செல்லம் போது யாரும் உணவுப் பொதிகளையும், பிளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தல்களை வழங்க முடியாது எனவும், குடிநீர் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், நீரை வீண் விரயம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
காட்டு வழியாக செல்லும் யாத்திரிகர்கள் செல்லும் பாதையில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகளை வீசாமல் செல்லுமாறும் கேட்டுள்ளார்.
