கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்படாமல் விட்டால் எதிர் காலத்தில் ஒரு தமிழ் முதல் அமைச்சரை உருவாக்க முடியாது அபாயகரமான நிலையில் இருக்கின்றது எனவே கிழக்கு தமிழர் கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து செயற்பட முன் வரவேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன், எஸ்.வியாளேந்திரன், முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட கிழக்கு தமிழ் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுரட்சி மன்ற தேர்தலில் படகு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மட்டு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இன்று (9) இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட கருணா அம்மான் உரையாற்றுகையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது சிறந்த நிகழ்வாக பார்க்கின்றோம் இது குறுகியகால அரசியல் அல்ல ஒரு நீண்டகால வெற்றி பயணமாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய தேவைபாட்டை உருவாக்குபவர்களாக நீங்கள் சத்திய பிரமாணம் எடுத்துள்ளீர்கள.
இருக்கின்ற சபைகளிலே அநீதிகளை தட்டிக் கேட்பவர்களாக மக்களுக்கு சேவையாற்றுபவர்களாகவும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தொடர்பான கொள்கைகளை மக்களுக்கு கொடுப்பவர்களாக இருக்கவேண்டும்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் வெறும் பதவி பட்டங்களுக்காக அல்ல எங்களது கிழக்கு மாகாண மக்கள் உரிமையுடனும் தத்துணிவுடன் காத்திரமான தியாகத்துடன் வாழவேண்டும் என்பதற்காக.

கிழக்கு மாகாணம் மூவினங்களும் செறிந்து வாழும் இடம் எனவே தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்படாமல் விட்டால் நிச்சயமாக ஒரு தமிழ் முதல் அமைச்சரை உருவாக்க முடியாது ஆகவே தான் கிழக்கு தமிழர் கூட்டமைப்பை உருவாக்கி அனைத்து கட்சிகளையும் ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதில் பதவி ஆசை பட்டம் போன்றவற்றுக்காக செயற்படுவதாக இருந்தால் கிழக்கு மாகாணம் பறி போவது என்பது உறுதியான விடையம் இதனை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே ஆரம்பத்தில் கூறியிருந்தோம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து கொள்ளுங்கள் என இந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்தால் 12 சபையில் தமிழர்கள் ஆட்சி அமைக்க முடியும் இதை தான் வெளிப்படையாக கூறியிருந்தோம்.
இப்போது அரசாங்கமும் அழைப்பு விடுத்துள்ளது எனவே யார் முன்வருகின்றார்கள் எங்களுக்கு சாதகமான பேச்சுவர்த்தை நடாத்தி நாங்கள் அந்த ஆட்சியை அமைப்பதற்கு உதவி செய்வோம் அதில் மாற்று கருத்து இல்லை இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
வடமாகாணத்தை எடுத்து கொண்டால் இன்று ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்தரகுமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது அவ்வாறே டக்கிளஸ் தேவானந்தாவை தமிழரசு கட்சி பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார் அதற்கு பல விமர்சனம் நடக்கின்றது அதில் வேடிக்கையான விடையம் ஒட்டுக்குழு தலைவரை சந்தித்ததாக.
அவரும் மக்களுக்காக போராட்டத்துக்காக ஆயுதம் தூக்கி வந்த தலைவர்தான் அவர் பல வருடங்களாக பாராளுமன்றத்தில் இருந்து சேவையாற்றியவர் வந்தவர்.
ஆகவே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சிவஞானம் துணிந்து சென்று டக்கிளசுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம்.

இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள்.
அதை தான் கிழக்கு மாகாணத்தில் எதிர்பார்கின்றோம் வேடிக்கை என்ன என்றால் யுத்தம் நடந்து கொண்ட காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்ததில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ள அவர்கள் தான் தேசியத்தை பற்றி அதிகமாக பேசுகின்றனர்.
உண்மையில் களத்தில் இருந்த போராளிகள் இன்று துரோகிகளா ஆக்கப்பட்டுள்ளனர் எனவே களத்தில் நின்ற எத்தனையோ போராளிகள் கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கி கொள்ளவேண்டும்.
நாங்கள் சாரயமே , ஒரு சோற்று பாசலே அரிசி மூடை கொடுக்கவில்லை அந்த வாக்குகள் மக்களின் அடிமனதில் இருந்து வந்த வாக்குகள் இன்று பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சாராயம், அரிசி மூடை கொடுத்தது எங்களுக்கு தெரியும் என ஆளும் கட்சி அந்தஸ் உள்ள அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எவ்வளவு அவமானம்.என்று தெரிவித்துள்ளார்.
