மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் போயா தினத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (10) பிற்பகல் கைது செய்ததுடன், 100 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.பி பண்டாரவின் ஆலோசனையில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சாஜன். பி.எஸ். இயலகம தலைமையில், ரத்நாயக்க, சமிந்த, விக்கினேஸ், டிலாசன் ஆகிய குழுவினர் சம்பவதினமான இன்று கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையமான வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.


இதன்போது கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட 44 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 100 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக பொசன் பூரண தினத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி ஆகிய குற்றங்களுக்கு கீழ் வழக்கு தாக்கல் செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை பொசன் பூரண தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி பிரியந்த பண்டார பணிபுரையின் கீழ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.