மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (11) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில், பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தலைமையில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்களும் பங்குகொண்டனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஜார் பகுதியை அடைந்தது.
பின்னர் பேரணியில் கலந்துகொண்டவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் ஒன்றுகூடி பதாதைகளை ஏந்தியவாறு பலவாறு கோஷம் எழுப்பினர்.
“மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையிலான காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்து”, “எங்கள் மண்ணை சுடுகாடாக்காதே”, “அடிக்காதே, அடிக்காதே எங்கள் வயிற்றில் அடிக்காதே” உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஞானப்பிரகாசம் அடிகளாரும் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், மன்னார் மக்கள் எதிர்நோக்கும் இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அளிக்கவேண்டிய மகஜரினை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் மன்னார் ஆயர் மற்றும் சர்வமத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர்,
மன்னார் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறித்து நான் நன்கறிவேன்.
மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் சர்வமத தலைவர்கள் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில், என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பேன் என்றார்.