விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலை மருத்துவமனையில் சொகுசாக காலம் கழிப்பதாக அறியக் கிடைத்துள்ளதாக வெளிநாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த செய்தி இணையதளத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தில் மோசடி செய்து சிறைத்தண்டனைக் கைதியொருவரை மோசடியாக விடுதலை செய்த சம்பவத்தில் தற்போதைக்கு துஷார உபுல்தெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 09ஆம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் துஷார உபுல்தெனிய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ள கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
எனினும், அன்றையதினம் இரவே அவர் இரகசியமான முறையில் சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவருக்கு சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைக்கு துஷார உபுல்தெனிய, பகல் நேரங்களில் மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகராக இருக்கும் தனது சகோதரனின் அலுவலக அறைக்குள் தங்யிருப்பதுடன், இரவு நேரங்களில் மட்டும் தூங்குவதற்காக மாத்திரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகின்றது.
ஏனைய விளக்கமறியல் கைதிகளுக்கு இல்லாத பல்வேறு சலுகைகள் சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் துஷார உபுல்தெனியவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நம்பகமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.