இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப்பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் அரச தொலைக்காட்சி நிலைய தலைமையகத்தின் மீது மீது படையினர் நேற்றையதினம் (16) வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில்,குறித்த தாக்குதலின் போது ஸ்டுடியோவிலிருந்து செய்தி வாசிப்பாளர் பதற்றமடைந்து ஓடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்,ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஈரான் அரச தொலைக்காட்சி ஒளிபரப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

இதன்போது ஒளிபரப்பின் நடுவில் ஸ்டுடியோவிலிருந்து பெண் செய்தி வாசிப்பாளர் எழுந்து ஓடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த பெண் செய்தி வாசிப்பாளர் இஸ்ரேலுக்கு எதிராக நேரடி ஒளிபரப்பில் விமர்சனத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, அவர் ஒளிபரப்பை விட்டு வெளியேறும் காட்சியைக் காண முடிந்தது.
இந்த சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, தொலைக்காட்சி நிலையங்கள் அமைந்துள்ள தெஹ்ரானின், குறித்த பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.